பிழைப்புக்காக வெளிநாடு சென்று இறந்த தன் கணவனின் உடலை மீட்கும் பெண்ணின் போராட்டம் – க. பே. ரணசிங்கம்
ராமநாதபுரமும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுமே கதைக்களம். படத்தின் முதல் பாடலில் இருந்தே கதையை சொல்ல தொடங்குகிறார் இயக்குனர். உள்ளூரில் தன் சொந்த மக்களுக்காக முன்னின்று போராடும் ரணசிங்கம் தன் குடும்ப சூழ்நிலைக்காக வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார். அங்கு நடக்கும் விபத்தில் இறந்துபோகும் ரண சிங்கத்தின் உடலை மீட்கும் ஆரியநாச்சியின் போராட்டமே கதையின் கரு.
ரணசிங்கமாக விஜய் சேதுபதியும் அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் நடித்துள்ளனர். மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் அதற்கேற்ற நடிகர்களும் தேர்வு செய்தமை சிறப்பு. வசனங்களும் இசையும் ஒளிப்பதிவும் கதையோடு ஒன்றி வலிமை சேர்க்கின்றன. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எங்கும் மிகையில்லாமல் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.
தன் கணவனின் உடல் வர தாமதமாகும் பெண்ணின் மனநிலையும் அந்த சூழலையும் அப்படியே காட்சிப்படுத்தி நம் மனதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர். ‘செத்தாலும் சொந்த ஊரில் சாக வேண்டும்’ என்கிற வசனமும் இறுதிக்கட்ட காட்சிகளும் மனதை கனக்கச் செய்கின்றன. மேலும் இக்கதை உண்மைச் சம்பவத்தை தழுவி எடுத்திருப்பதால் பல நிதர்சன உண்மையும், அரியநாட்சியின் வலியையும் அழியாவண்ணம் மனதில் நிற்க பதிவு செய்தமை படத்தின் வெற்றியாகும்.